மழையில் நனைத்து
பொறியில் பற்றவைத்து
புகைக்கும் சிகரெட்
ஸைலன்சர்!
குளிர்ந்த காலை நேரம்
பச்சைக்கிளிகளின் பள்ளியெழுச்சி
தெளிவு கலந்த தூக்கம்
கண் விழித்ததும் என்
கண்ணுக்கினியாள்
இப்படியாக மலர்ந்தது
இன்றைய காலை!
நமக்கு வீடு காவல்!
வீட்டுக்கு கதவு காவல்!
கதவுக்கு பூட்டு காவல்!
பூட்டுக்கு சாவி காவல்!
விரலினும் சிறிய சாவி
வீட்டிற்கே காவலென்றால்,
மனிதனின் மனத்திற்கு
காவலென்ன அறிகிலேனே!
முழுமதி!
ஊருக்கே வெளிச்சம் தரும்
ஒற்றை விளக்கு.
அழகாய் ஒளிர்ந்தது
அவளது கண்களில்.
ஆம்.
நிலவைப்பார்த்து
நித்தம் மலரும்
சந்திரகாந்தி அவள்.
நிலவின் ஒளியில்
நிறையும் முகத்தில்
மகிழ்ச்சி ததும்பும்
மழலை அரும்பும்.
குழலில் மறையும்
குழந்தை முகத்தில்
குறையேதும் இல்லாத
நிம்மதி நிறையும்.
மகிழ்ச்சி பரவும்
மட்டற்று வளரும்.
மனதின் வலிகள்
மறைந்தே போய் விடும்.
காதல் நிறைத்து
கவிதை எழுதினால்
காகிதம் தீர்ந்தது
கண்கள் பனித்திடும்.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
அக்கரை இக்கரை ஆனபின்
இக்கரை அக்கரை ஆகிடும்.
அக்கரை ஆன இக்கரை மேல்
அக்கறை வருமா?